Tuesday, January 27, 2015

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?


  • தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?



“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” - தோழர் மாஓசேதுங்

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற எமது இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்தும் நாம் தெளிவாக கண்டறிய வேண்டும். எமது பாதை தவறாக இருக்குமாயின் எமது இலக்கை ஒருபோதும் எம்மால் சென்றடைய முடியாது. எனவே முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு பற்றி தீர்மானிக்கப்பட்டதும் அடுத்த முக்கியமான பணி அந்த இலக்கை அடைவதற்குரிய பாதையை தெரிவு செய்வதாகும்.

இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மாபெரும் ஆசான் மாசேதுங் முன்வைத்த ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும். இதில் எந்தப் பாதையை தெரிவு செய்தால் தமிழ் இனம் விடுதலை பெற முடியும் என்பதே இன்று எம் முன் உள்ள கேள்வியாகும்.

ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள். அத்தோடு கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்றும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போர் ஆயுதத்தால் அழிக்கப்படுவர் என்றும் அவர்கள் மக்களை எச்சரிக்கின்றார்கள்.

புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர். புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல. மேலும் ஆயுதப் போராட்டம் புலிகளுக்கு முன்னரும் இருந்தது. அது புலிகளுக்கு பின்னரும் இருக்கும். எனவே புலிகள் வெற்றி பெறவில்லை என்பதால் அது ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்று பொருள் கொள்ள முடியாது.

புலிகள் பலமாக இருக்கும்வரை எந்த கருத்தையும் தெரிவிக்காத வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் “ஆயுதப் போராட்டம் பயனற்றது” என்று பகிரங்கமாக கருத்து கூறுகிறார். அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா  “மீண்டும் அகிம்சைப் போராட்டம் நடத்தப் போவதாக” அறிக்கை விடுகிறார்.

1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் இவர்களது இந்த தமிழரசுக்கட்சியே 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இவர்களது இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே  இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.

மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர். இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வையும் போராட்ட மனப்பான்மையையும் மழுங்கச் செய்யப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவாhத்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.  இலங்கையில் பலமாக இருந்த புலிகள் இயக்கத்தை பேச்சுவாhத்தைக்கு அழைத்து பலவீனமாக்கியதை நாம் கண்முன் கண்டோம். அதேபோல் இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி இந்திய அரசு அழைப்பதும் அவர்களது ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவே.

எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கிவைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே. ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட இயந்திரமே அரசு எனப்படும். ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார்.

இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறிவருகிறார்கள். அதாவது இன்றைக்கு தமிழ் மக்களை அடக்கி வரும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் தவிடுபொடியாக்காமல் அதற்கு பதிலாக தமிழ்தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயந்திரமாகிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உருவாக்காமலும்  தொழிலாளி வர்க்கத்திற்கும் அதனுடைய நேச சக்திகளுக்கும் விமோசனம் கிட்டாது. இந்த உண்மையை நாங்கள் நன்றாக கிரகித்துக் கொள்ள வேண்டும்.

போராளிகள் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர். இரத்தம் சிந்த வேண்டும் என்பதை இலட்சிமாக கொண்டு அலைபவர்களும் அல்லர். வன்முறை இன்றியும் இரத்தம் சிந்தாமலும் எந்த இழப்பும் இன்றி விடுதலை கிடைக்குமாயின் அதையிட்டு  மகிழ்சி கொள்பவர்கள் எங்களைவிட யார் இருக்க முடியும்? ஆனால் அது வெறும் கனவு. அந்தப் பொய்யை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

இயற்கையின் விதிகளை கவனித்து பார்ப்போமானால் அதிலிருந்தும் பலாத்காரத்தை தவிர்க்கமுடியாது என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக ஒரு கோழிக் குஞ்சை எடுத்துக்கொள்வோம். கோழி முட்டையை அடைவைப்பதன் மூலம் குஞ்சு உருவாகிறது. அது பருவமடைந்தபின் தான் காந்தியின் சீடன் என்றும் அகிம்சையைக் கடைப்பிடிப்பவன் என்றும் முட்டைக் கோதிற்கு எதிராக பலாத்காரம் பாவித்து கொத்தாவிடில் அதற்கு என்ன ஆகும்? அது உள்ளேயே அவிந்து அழிந்து போகும். அதற்கு பதிலாக இயற்கை விதியின்படி அக் குஞ்சு முட்டைக் கோதிற்கு எதிராக பலாத்காரம் பாவித்து அதைக் கொத்தி உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. முட்டைக் கோதிற்கு  எதிராக பலாத்காரம் பாவிக்க வேண்டும் என்ற விதியை அக் கோழிக் குஞ்சுக்கு சொல்லிக் கொடுத்தவர் யார்? தலைவர் மாசேதுங்கா? அல்லது கால் மாக்ஸா? இல்லை. இவர்கள் இருவருக்கும் முன்பாகவே அதாவது இயற்கையாகவே கோழிக்குஞ்சு கோதைக் கொத்திக்கொண்டு வெளியே வந்திருக்கிறது.  இது ஒரு இயற்கை விதி. இதைப் போல வேறு பல உதாரணங்களையும் எடுத்துக் கூற முடியும். இதற்காகத்தான் “பழைய சமுதாயம் என்னும் கர்ப்பப் பைக்குள் உருவாகியிருக்கும் ஒவ்வொரு புதிய சமுதாயத்திற்கும்  மருத்துவச்சி பலாத்காரம்” என்று கால்மாக்ஸ் கூறினார்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் பொதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்தவிடுகின்றனர். இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம். அநேகமாக இந்துமத பக்தர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாத விடயம் ஒன்றிருக்கிறது. அது என்னவெனில் அவர்கள் வழிபடும் பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் பலாத்காரத்திற்கு பாவிக்கப்படும் ஆயுதங்கள் இருப்பதை அவதானிக்க முடியும். சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆயுதம் வைத்திருக்காத இந்து மதக் கடவுள் யாரேனும் இருக்கிறாரா என்றுகூட கேட்கலாம்

இந்துமத புராணக் கதைகளை எடுத்துப் பாருங்கள். கந்தபுராணக் கதையின் படி முருகன் சூரர்களை வென்றது சத்தியாக்கிரக போராட்டத்தின் மூலமல்ல. மாறாக வேல் ஆயுதத்தின் மூலமாகவே. அவர் சூர சங்காரம் செய்தார். இராமாய ணத்தில் இராவணைக் கொன்றது இராம பாணம். மகா பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு வெற்றி கொடுத்தது அர்ச்சனுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட பாஸ்பதாஸ்திரம். மகா பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னர் பகவத் கீதையின் மூலமாக அர்ச்சனுக்கு கிருஸ்ணன் போதிப்பதும் அதர்மத்திற்கு எதிராக தர்மத்திற்காக போராட வேண்டிய கடமையையே.

மகாகவி பாரதியார் பாடினார் “ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று. இதைத்தான் நாங்கள் புரட்சி என்று கூறுகிறோம்.
சிலி நாட்டில் கம்யுனிஸ்டுகள் தேர்தல் வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் உடனே சிலி நாட்டு ராணுவத்தின் துணையுடன் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தது. இது பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு படை இல்லாமல் ஆட்சியை தக்கவைக்க முடியாது என்பதை நிரூபித்தது. அதேபோல் வியட்நாமில் கம்யுனிஸ்டுகள் 26 வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தார்கள்.

சிலி நாட்டில் நடந்த எதிர்ப் புரட்சியின் வெற்றியில் இருந்தும் இந்தோ சீனாவில் அதன் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய ஏகாதிபத்திய வல்லரசாகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை போரில் தோற்கடித்தலில் இருந்தும் சோசலிசத்திற்கு சமாதானப் பாதையென்று ஒன்று இல்லை என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ருஸ்சிய அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதே பாடத்தைதான் உலகிற்கு வலியுறுத்துகின்றன.

அதே நேரத்தில் புரட்சியாளர்கள் தனிப்பட்ட பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாக பாவிப்பதை எப்பொழுதுமே எதிர்த்து வந்துள்ளனர். ஏனெனில் தனி மனிதனை அழிப்பதன் மூலம் சமுதாயத்தை மாற்றிவிட முடியாது என்பதை புரட்சியாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

ஒரு கால கட்டத்தில் ரஸ்சியாவில் போல்சிவிக் கட்சி உருவாவதற்கு முன்னர் ஜார் மன்னனை கொல்வதற்கு  சிலர் சதி செய்தனர். அவர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். ஆம், அவர்கள் ஜார் மன்னனை கொன்றனர். ஆனால் அவர்களால் ஜார் எதேச்சதிகாரத்தை தோற்கடிக்க முடியவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விதமான ஒரு சதியில் ஈடுபட்டதற்கான மரண தண்டனை விதிக்கப்ட்டவர்களில் லெனின் சகோதரர் இலியானோவும் ஒருவர். இச்சம்பவம் லெனின் மேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் சகோதரரை மிகவும் நேசித்தார். அப்படியிருந்தும் அவர் திடமாக கூறினார் “ இந்த வழி எமக்கு உகந்தது அல்ல. வேறு வழிகளில் நாம் வெற்றியை தேட வேண்டும்” என்று. இதனடிப்படையில்தான் போல்சிவிக் கட்சியை கட்டியெழுப்பி அதன் மூலமாக லட்சக் கணக்கான  ரஸ்சிய மக்களை அணிதிரட்டி  பலாத்காரப் புரட்சியின் மூலமாக ஜார் எதேச்சிகாரத்தை லெனின் தோற்கடித்தார். இதுதான் பலாத்காரத்தைப்பற்றி புரட்சியாளர்களின் கண்ணோட்டமாகும்.

இந்தியாவில் தமிழக மக்களின் விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலையை தோழர் தமிழரசன் முன்வைத்தார். அவர் அந்த இலக்கை அடைவதற்காக ஆயுதப் போராட்டப்பாதையை முன்னெடுத்தார். ஆனால் அவரை வன்முறையாளர் என்றும் அவருடைய பாதையை பலாத்கார பாதை என்றும் மத்திய மாநில அரசுகள் விமர்சிக்கின்றன. தோழர் தமிழரசன் ஒரு புரட்சியாளர். அவர் மாக்சிச லெனிச மாவோசிச வழிகாட்டலில் தமிழ்நாடு விடுதலைக்காக போராடியவர்.

மாபெரும் ஆசான் மாவோ குறிப்பிட்டது போல் தோழர் தமிழரசன் “மக்கள் சக்தியே மகத்தான சக்தி” என்பதை புரிந்து ஏற்றுக்கொண்டவர். அதுமட்டுமல்ல மாசேதுங் கூறியதுபோல் தோழர் தமிழரசன்  மக்களுடன் சேர்ந்து உணவு உண்டார். மக்களுடன் சேர்ந்து உறங்கினார். மக்களுடன் சேர்ந்து உழைத்தார். அதனால்தான் மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். மக்கள் அவரை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை. மக்களின் பெரு ஆதரவின் மூலமே எதிரியின் கையில் பிடிபடாமல் அவர் வாழ்ந்து வந்தார். இறுதியில் உளவுப்படை சதி செய்தே தோழர் தமிழரசனைக் கொல்ல முடிந்தது.

தோழர் தமிழரசனைக் கொன்றதன்மூலம் அவரது கொள்கைகளைக் கொன்றுவிட்டதாக தமிழக காவல்துறை கனவு கண்டது. ஆனால் அவரது கொள்கை இன்று மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. அதனால்தான் அவரது கொள்கைகளை முன்னெடுப்பவர்களை நசுக்குவதற்காக மத்திய மாநில அரசுகள் புலிகள் மீதான தடையை நீடித்துள்ளன. இல்லாத புலிகளுக்கு தடைவிதித்தது மட்டுமல்ல வழக்கத்திற்கு மாறாக இரண்டு வருடத்திற்கு பதிலாக ஒரேயடியாக ஜந்து வருடம் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அவ் தடை நீடிப்புக்கு காரணமாக மதுரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுக்கும் போராளிகள் மீதான பைப் வெடிகுண்டு வழக்குகளை தமிழக அரசு காட்டியுள்ளது. இதிலிருந்தே தமிழக அரசு புலிகள் மீதான தடையை நீடித்திருப்பது தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டபாதையை முன்னெடுக்கும் தமிழ் இன உணர்வாளர்களை நசுக்குவதற்கே என்பது நன்கு புலனாகிறது.

கடந்த வருடம் இந்தியாவில் தேர்தல் மூலம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. இந்த வருடம் இலங்கையில் மைத்திரி சிறிசேனா ஜனாதிபதியாகியுள்ளார். இது தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சியும் மகிந்த ராஜபக்சவும் தோற்கடிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில் தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே.

எம்மை அடக்கும் பிற்போக்கு சக்திகளை தேர்தல் மூலம் தூக்கியெறிய முடியாது என்பதையே கடந்த தேர்தல்கள் எமக்கு உணர்த்துகின்றன. லெனின் ஒரு தடைவ கூறியது- “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையை பெற வேண்டும், அதற்கு பிறகுதான் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கயவர்கள் அல்லது முட்டாள்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளி வர்க்கம் அதன் பக்கத்திற்கு மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்துவிட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

பாராளுமன்ற தேர்ல்களை பகிஸ்கரிகும்படி கோரிய இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது”.

எனவே
பாராளுமன்ற பாதையை நிராகரிப்போம்!
ஆயுதப் போராட்டப் பாதையை முன்னெடுப்போம்!

1 comment:

  1. "தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?" எனும் இந்த காலத்திற்கு ஏற்ற உண்மைகளை மொழியும் பாலன் தோழரின் இந்த புரட்சிக் கருத்துகளை சொல்லும் நான்கு பக்க கட்டுரை தமிழ் தேசிய அறம் குறித்த செய்திகளை எடுத்து வரும் புரட்சி இதழான விடுதலை அறம் பெப்ரவரி இதழில் வெளிவந்துள்ளது.

    ReplyDelete